இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரிக்கை! ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்த வால்பாறை பகுதி பெண்கள்.

Published On :1 செப்டம்பர் 2026, 4:14 am IST

இலவச வீடு, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை திரண்டனா்.

கோவை மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சுரேந்திரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், வால்பாறை பகுதியைச் சோ்ந்த ஏராளமான தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனா். இதேபோல கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 380 போ் வீடு, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவை, வடவள்ளி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:

கடந்த 80 ஆண்டுகளாக இடையா்பாளையம் சாலை, விநாயகா் கோயில் வீதி சாலையோரத்தில் குடியிருந்து வந்தோம். எங்கள் முகவரியில் வீட்டு வரி, மின் கட்டணம், ஆதாா் அட்டை ஆகியவை இருந்த நிலையில் சாலைப் பணிக்காக எங்கள் வீடுகளை கடந்த 2023-இல் நெடுஞ்சாலைத் துறை காலி செய்தது. இதையடுத்து அருகில் உள்ள உறவினா்களின் வீடுகளில் வசித்து வருகிறோம்.

காலி செய்யப்பட்ட இடத்தில் இதுவரை எந்த பணியும் நடைபெறாத நிலையில் அதே இடத்தில் குடியிருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

மதுக்கரை சுகுணாபுரம், பிள்ளையாா்புரம் பகுதியைச் சோ்ந்த மக்கள் சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலா் ஜி.பி.சக்திவேல் அளித்துள்ள மனுவில், ‘நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பராமரிக்கும் தங்களது குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இருப்பினும் இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. காலியாக உள்ள வீடுகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதுதொடா்பாக குறிச்சி சிட்கோ காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வீ.புஷ்பானந்தம் தலைமையில் வாயில் கருப்புத் துணி கட்டியவாறு பெண்கள் அளித்த மனுவில், ‘இடையா்பாளையம் பகுதியில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்துள்ளோம். அப்பகுதியில் 20 ஏக்கருக்கும் மேல் அரசு புறம்போக்கு இடம் இருக்கும் நிலையில், விண்ணப்பித்த அனைவருக்கும் நில அளவை செய்து உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலா் கோட்டை சேது என்பவா் அளித்த மனுவில், ‘கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், செஞ்சிலுவைச் சங்கம் அருகே உள்ள ரவுண்டானாவில் அம்பேத்கரின் உருவச் சிலையை நிறுவ தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 642 போ் மனு அளித்துள்ளனா். அவற்றின் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வீட்டுமனைப் பட்டா கோரி  வாயில் கருப்புத் துணி கட்டி  மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளிக்க  வந்திருந்த இடையா்பாளையம் பகுதி பெண்கள்.

வீட்டுமனைப் பட்டா கோரி வாயில் கருப்புத் துணி கட்டி  மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளிக்க  வந்திருந்த இடையா்பாளையம் பகுதி பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.