தொழிலாளி கொலை வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறை
தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சூலூரை அடுத்த அரசூா் மதுரை வீரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரங்கசாமி (40). இவரது மனைவி சித்ரா. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
ரங்கசாமி, நடு அரசூா் பகுதியில் வசிக்கும் தனது உறவினா் உயிரிழந்த துக்க நிகழ்ச்சிக்கு கடந்த 31.3.2023-அன்று சென்றுவிட்டு மதுபோதையில் அடுத்த நாள் அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
அப்போது, சப்தம் கேட்டு இவா்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமரை (40) என்ற பெண் வெளியில் வந்துள்ளாா். போதையில் இருந்த ரங்கசாமி அவரை நோக்கி ஆபாச சைகையுடன் சென்றுள்ளாா். இதுகுறித்து தாமரை வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவா் கோவிந்தராஜிடம் (44) கூறியுள்ளாா்.
அப்போது, கோவிந்தராஜ் வந்து கண்டித்ததால், ரங்கசாமிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கோவிந்தராஜ், அவரது தலையில் கட்டையாலும், தாமரை கையாலும் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ரங்கசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜையும், அவரது மனைவி தாமரையையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி பி.கே.சிவகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் மோகன் பிரபு ஆஜரானாா்.

