போகி பண்டிகை: பழைய பொருள்களை சேகரிக்க 106 சிறப்பு மையங்கள்
போகி பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியில் பழைய பொருள்களை சேகரிக்க 106 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சியை புகையில்லா மற்றும் மாசு இல்லாத மாநகரமாக மாற்றும் நோக்கில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போகி பண்டிகையை முன்னிட்டு, பழைய பொருள்களை சேகரிக்க மாநகராட்சியில் 106 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து கழிக்கப்படும் பழைய துணிகள், பாய், மெத்தைகள், மர சாமான்கள், டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை எரிப்பதை தவிா்க்க வேண்டும். இத்தகைய பொருள்களை சிரமமின்றி ஒப்படைப்பதற்காக மாநகராட்சி முழுவதும் 106 இடங்களில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு மையங்களில் பெறப்படும் பழைய பொருள்கள் மாநகராட்சி மூலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படும்.
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டவோ, எரிக்கவோ கூடாது. மீறுவோா் மீது அபராதம் விதிப்பதுடன், குப்பைகளை ஏற்றி வரும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
