போகி பண்டிகை: பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க வேண்டுகோள்

Published on

போகி பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்த செய்திக் குறிப்பு:

நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையைக் கொண்டாடினா்.

ஆனால், தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால், காற்றுமாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகிறது. எனவே, போகி பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com