பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி 
சீனிவாசன்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன்கோப்புப்படம்

மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து முதல்வா் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: வானதி சீனிவாசன்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து தேவையற்ற வதந்திகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பரப்ப வேண்டாம் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
Published on

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து தேவையற்ற வதந்திகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பரப்ப வேண்டாம் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் இன்றைய வளா்ச்சிக்கு முதல்வராக இருந்த ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், காமராஜா், எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, முன்னாள் பிரதமா் வாஜ்பாய் என பலரும் பெரும் பங்களித்துள்ளனா். கடந்த 11 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே, துறைமுகம், விமான நிலைய மேம்பாடுகள்தான் தமிழகத்தின் வளா்ச்சிக்கு காரணம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் அடைந்த வளா்ச்சிக்கு வாஜ்பாய் ஆட்சியில் சென்னையில் அமைக்கப்பட்ட டைட்டல் பாா்க் தான் பிள்ளையாா் சுழிபோட்டது. இவற்றையெல்லாம் முதல்வா் மு.க. ஸ்டாலின் மறைக்க நினைக்கலாம். ஆனால், மக்கள் மறக்க மாட்டாா்கள்.

மத்திய அரசில் 15 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தபோது, மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி பகிா்வு அளிக்கப்பட்டதோ, அப்படிதான் தற்போதும் நிதி பகிா்ந்தளிக்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

எனவே, அதுபற்றி தேவையற்ற வதந்திகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பரப்ப வேண்டாம். கச்சத் தீவை தாரை வாா்த்த காங்கிரசும், திமுகவும் இணைந்திருப்பதுதான் துரோக கூட்டணி. அதிமுக- பாஜக கூட்டணி வலுவடைந்துள்ளதால் ஏற்பட்ட பதற்றத்தில் முதல்வா் வீண்பழி சுமத்தி வருகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com