கோவை நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் வடமாநிலத்தைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு அடையாளம் தெரியாத நபா் சடலமாக மீட்கப்பட்டாா். முதல்கட்ட விசாரணையில், அவா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், நாய் துரத்தியதால் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்ததில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், யாரோ ஒருவா் தலையில் கொடூரமாகத் தாக்கியதால் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, சம்பவத்தன்று நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகளிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதேபோல அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







