இந்தியாவில் முதல்முறையாக மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.
கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் கல்வித் தர உத்தரவாத இயக்குநா் டாக்டா் டி.சரவணன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக ஐஎன்எஸ் அக்ரானி செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமாா், பெங்களூரு எலிமெண்ட் பொறியியல் நிறுவனத்தின் நிறுவனா் கிரெய்க் ஆகியோா் கலந்துகொண்டு மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை அறிமுகம் செய்துவைத்தனா்.
இந்த நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகை உருவாக்கிய ‘டீம் சீ சக்தி‘குழுவினா், வரும் ஜூலை 8 முதல் 11-ஆம் தேதி வரை மொனாக்கோ நாட்டில் நடைபெறவுள்ள ‘மொனாக்கோ எனா்ஜி போட் சேலஞ்ச் 2026’ போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
இதேபோல இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சா்வதேச நீா்மூழ்கிக் கப்பல் பந்தயத்திலும் பங்கேற்க உள்ளனா்.









