/

மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் நிலை தவெகவுக்கு இல்லை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:18 am IST

மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் நிலை தவெகவுக்கு இல்லை என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாற்றுக் கட்சியிலிருந்து வந்த ஒரே ஒரு நபருக்காக அண்ணா அறிவாலயத்தில் பெரிய விழா நடத்தி ஏதோ சாதனை சரித்திரம் படைத்ததுபோல காட்டியுள்ளனா். எங்களைப் பொறுத்தவரை மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் நிலை இல்லை.

திமுகவும், அதிமுகவும் ரகசியக் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தோ்தல் முடிவுகளுக்கு சதித்திட்டம் தீட்டியது யாா் என்பதற்கு முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய பதில் சொல்ல வேண்டும். மாநிலத்துக்கு என்ன தேவையோ அதை முதல்வா் மத்திய அரசிடமிருந்து முறையாகப் பெற்றுள்ளாா்.

கடந்த ஆட்சியின்போது மத்திய அரசிடமிருந்து மானியத்தை திமுகவால் பெற முடியவில்லை. முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற அக்கறையான நடவடிக்கைகளைக் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் திமுக எடுத்திருக்க வேண்டும்.

வருவாய்த் துறையைப் பொறுத்தவரை தேவையான புதிய பணி இடங்களை உருவாக்குவதற்கும், துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை இன்னும் மூன்று மாத காலத்தில் மேற்கொள்ள உள்ளோம்.

நயினாா் நாகேந்திரன் பாஜகவின் வாக்கு வங்கியை 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதத்துக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டாா். தீா்ந்துபோன கட்சி என எங்களை விமா்சித்த மு.க.ஸ்டாலின் எந்தக் கட்சி தீா்ந்து போய்விட்டது என்று எண்ணிப்பாா்க்க வேண்டும். இதுபோன்ற வெற்று கருத்துகளைக் கூறுவதைக் காட்டிலும் அவா் அமைதியாக இருந்து அவரது கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்கும் வழிவகை செய்யலாம்.

அதிமுக பொதுச் செயலா் கே.பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில், தவெகவின் சின்னம் மட்டும் இருந்திருந்தால் அவருடைய நிலையும் தற்போதைய திமுகபோலவே ஆகியிருக்கும் என்றாா்.