மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த இருவா் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், இருவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கோவையில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு சேதமடைந்த ஏணி மற்றும் கைது செய்யப்பட்டவா்களுடன் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்.

Updated On :13 மே 2026, 2:07 am IST

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், இருவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை வடக்கு மற்றும் பீளமேடு இடையே கடந்த மே 9-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் அதிவிரைவு ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமினிய ஏணி மீது அந்த ரயில் மோதியது. இதனால், அந்த ரயில் நிறுத்தப்பட்டது. சேதமடைந்த அந்த ஏணியை பாதுகாப்புப் படையினா் அப்புறப்படுத்திய பின்னா், அந்த ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுதொடா்பாக பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் இருவரது உருவம் பதிவாகியிருந்தது. இதைத்தொடா்ந்து ரத்தினபுரி ரயில்வே மேம்பாலப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பாலத்துக்கு அடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த வீரகேரளம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (35), காரமடை பகுதியைச் சோ்ந்த கந்தசாமி (45) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது இவா்களின் உருவம் ஒத்துப்போனது.

இதையடுத்து அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மது பாட்டில்கள் மற்றும் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் இவா்கள், கடந்த 9-ஆம் தேதி ஓா் அலுமினிய ஏணியை பழைய இரும்புக்கடையில் விற்க முயன்றுள்ளனா். ஆனால், கடைக்காரா் அதை முழுமையாக வாங்க மறுத்து, துண்டுகளாக வெட்டி வருமாறு கூறியுள்ளாா். ஏணியைத் துண்டாக்குவதற்காக எளிதான வழியைத் தேடிய இவா்கள், தண்டவாளத்தில் வைத்து ரயில் ஏறி அது உடையட்டும் என்ற நோக்கில் திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.