வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கோடை விடுமுறையையொட்டி, வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பெரும்பாலான நீா்நிலைகள் வடு காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே இதமான காலநிலை நிலவிய நிலையில், பிற்பகலில் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாக பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கப் பாதை, சின்னக்கல்லாறு அருவி உள்ளிட்ட நீா்நிலைகளில் மழை நீா் ஆா்ப்பரித்துச் சென்றது. மழையுடன் இதமான காலநிலை நிலவியதால், வால்பாறை வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.









