
தேசிய பால் வள தினத்தையொட்டி, ஈரோடு அருகே, சித்தோட்டில் உள்ள தேசிய பால் பண்ணை வாரிய அலுவலகத்தில் வர்கீஸ் குரியனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய பால் வாரியம் சார்பில் நாடு முழுவதும் தேசிய பால் வள தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனுக்கு தென்னிந்தியாவிலேயே முதல் சிலை ஈரோடு அருகே, சித்தோட்டில் உள்ள தேசிய பால் வள வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பால் வள தினத்தையொட்டி, வர்கீஸ் குரியனின் சிலைக்கு, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிறுவனத் தலைவரும், மக்களவை முன்னா உறுப்பினருமான எஸ்.கே.பரமசிவம் தலைமை வகித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பால் வள வாரிய அலுவலக முதல்வர் லெஸ்டர் நோன்ஸ், மருத்துவர் கிருத்திகா, கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.காசியண்ண கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:
இந்தியாவில் பால் உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தபோது அதிக அளவில் பால் பவுடர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். பால் வாங்குவதற்கு ரேஷன் முறை இருந்த நிலையை மாற்றி வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் குரியன்.
தேசிய பால் வள வாரியம் அமைக்க அடித்தளமிட்டு அதன் நிறுவனத் தலைவராகப் பொறுப்பு வகிதது பல திட்டங்களை குரியன் செயல்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்களை அவர் உருவாக்கினார். அவரது திட்டங்களால் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. குஜராத் தவிர தென் இந்தியாவில் வர்கீஸ் குரியனுக்கு வேறெங்கும் சிலை இல்லாத நிலையில் ஈரோடு பால் வள உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சித்தோட்டில் சிலை அமைத்திருப்பது அவரது பெருமையை உயர்த்துவதாக உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டப் பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் டி.கே.பெரியசாமி, கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ராமசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வெங்கடாசலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி லோகுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோட்டுக்கு நெருக்கமானவர் குரியன்
கேரள மாநிலம் கள்ளிக்கோட்டில் பிறந்தவர் குரியன். அவரது தந்தை ஈரோடு மாவட்டம் கோபியில் மருத்துவராகப் பணியாற்றியபோது கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் ஓர் ஆண்டு படித்தார். ஈரோடு மாவட்ட ஆவின் பால் பண்ணை நலிவடைந்தபோது மத்திய அரசு மூலமாக ரூ. 3 கோடி நிதியைப் பெற்றுத்தந்து, மீண்டும் புனரமைக்க உதவியவர் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






