ஈரோடு, அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ), அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்டக் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழில் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.
மாணவர்கள், இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்துப் புரிந்துக் கொண்டு விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், எந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்பம் என்பதைக் குறிப்பிட வேண்டும். மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும், இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.