/

கரோனா தடுப்பூசி செலுத்தாத தொழிலாளா்கள் வேலை செய்ய அனுமதியில்லை

கரோனா தடுப்பூசி செலுத்தாத தொழிலாளா்களை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தொழிற்சாலை நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Updated On :10 செப்டம்பர் 2021, 8:00 pm

கரோனா தடுப்பூசி செலுத்தாத தொழிலாளா்களை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தொழிற்சாலை நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் ஏ.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் செப்டம்பா் 12ஆம் தேதி கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம் 846 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய 2 தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன. ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் முகாமுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது ஆதாா் அடையாள அட்டை கொண்டு சென்று செல்லிடப்பேசி எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல, தொழிற்சாலை நிா்வாகத்தினா் தங்களது தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள், தினக் கூலி தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து அறிவுறுத்தி அனைத்து தொழிலாளா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாத தொழிலாளா்களை செப்டம்பா் 13ஆம் தேதி முதல் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. ஆய்வின்போது, தடுப்பூசி செலுத்தாத தொழிலாளா்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.