

பவானி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி பர்கூர் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைமக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சியில் 33 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 9 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தற்போது ஐந்து ஆண்டுக்குப் பின்னர் வேலை அட்டைகள் 1,000 பேருக்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி அலுவலகத்தில் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.
இதனால், ஏமாற்றமடைந்த பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சரவணன், எஸ்.சிவசங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடந்த முறை 5,500 பேர் இத்திட்டத்தில் பணி புரிந்தனர். தற்போது 1,000 வேலை அட்டைகள் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் படிப்படியாக அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலைமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.