/

ஈரோடு அருகே  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி:  பல லட்ச ரூபாய் பணம் தப்பியது

ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து சேதப்படுத்தி பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

News image
Updated On :23 மே 2022, 9:54 am

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகர்ப் பகுதியில் மாதம்பாளையம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. வங்கியின் முன்புறம் இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் ஒரு பணம் செலுத்தும் இயந்திரம் என மூன்று இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நள்ளிரவு  2.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அலாரம் ஒலி சத்தம் எழுப்பியது. அலாரம் ஒலி சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் எழுந்து சென்று பார்த்தபோது ஒரு ஏடிஎம் இயந்திரம் கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் இருந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் ஏதும் எடுக்க இயலாததால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொள்ளையடிக்க வந்த கும்பல் ஏடிஎம் மையத்திற்குள் நுழையும்போதே அங்குள்ள சிசிடிவி கேமராவை அட்டை போன்ற காகிதத்தை வைத்து மறைத்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். 

ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து சேதப்படுத்தி பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.