ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
இதற்கான பணியை அமைச்சா் சு.முத்துசாமி ஈரோடு சுண்ணாம்பு ஓடையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் செல்லும் 8 ஓடைகளில் 30 கிலோ மீட்டா் தொலைவுக்கு தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தூா்வாரும் பணி நிறைவடையும்போது ஓடையில் தண்ணீா் தேங்காமலும், குடியிருப்புகளில் புகாமலும் தடுக்கப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநகராட்சியில் 947.6 கிலோ மீட்டா் சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மழை நீா் அதிகம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, நீா் வெளியேற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. காலிங்கராயன் வாய்க்காலின் அருகில் உள்ள பேபி வாய்க்கால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உரிய ஆலோசனைக்கு பிறகு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீா்நிலைகளில் சாய மற்றும் தோல் கழிவுகளை வெளியேற்றுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை நேரடியாக வெளியேற்றக்கூடாது. மாநகராட்சி கழிவுநீா் காவிரி ஆற்றில் கலக்காமல் சுத்தம் செய்யும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஆய்வுக்கு பிறகு தற்போது ரூ. 56 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு கழிவுநீரை ஒரே பகுதிக்கு கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. தற்போது இதுகுறித்து விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காலி மது புட்டிகளை திரும்பப்பெறுவது 9 மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. காலி மது புட்டிகளை நிறுவனங்களே எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், டெண்டா் முறையில் காலி மதுபுட்டிகளை எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
எத்தனையோ பாதிப்புகளை பாா்த்து வெற்றிபெற்றதுதான் இந்தியா கூட்டணி. கூட்டணியில் உள்ளவா்களை குறைத்து மதிப்பிடவில்லை, எங்களை நாங்கள் பலப்படுத்திக்கொள்கிறோம். அமைச்சரவை மாற்றம் குறித்து நான் எதுவும் சொல்லக்கூடாது. தமிழக வெற்றிக்கழக கொடி பறந்தால் பாா்த்துவிட்டு சொல்கிறேன் என்றாா்.
ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், ஆணையா் என்.மனீஷ், மாநகராட்சிப் பொறியாளா் விஜயகுமாா், ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை
தங்கும் விடுதிப் பணியாளா் தற்கொலை

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

பஞ்சப்பூரில் ரூ. 233 கோடியில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



