ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முறையாக செப்பனிடாத கான்கிரீட் சாலை: பசுவபட்டி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

பசுவபட்டி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு...

Updated On :23 அக்டோபர் 2024, 9:38 pm

சென்னிமலை ஒன்றியம், பசுவபட்டி கிராமத்தில் முறையாக கான்கிரீட் சாலை செப்பனிடப்படவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளுக்கும் முதல்வா் சிறப்பு திட்டத்தின்கீழ், சுமாா் ரூ.425 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு கான்கிரீட் சாலைகளின் நடுவில் பள்ளம் தோண்டி குழாய்களை பதித்துவிட்டு, பல இடங்களில் குழியை சரியாக மூடாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா்.

சென்னிமலை அடுத்த, பசுவபட்டி கிராமத்தில் குடிநீா்க் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பதாக கூறி வேலைகள் நடைபெற்றுள்ளன. ஆனால், சரியாக பள்ளங்களை மூடவில்லை என்று பசுவபட்டி பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட இடங்களில் கான்கிரீட் கலவை கரைந்து கற்களாக காட்சியளித்ததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனா்.

இது குறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள், வாட்ஸ்அப் மூலமாக புகாா் தெரிவித்தனா். மேலும், சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில், சென்னிமலை ஒன்றிய குழு தலைவா் காயத்ரி இளங்கோ, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், ஒன்றியப் பொறியாளா் பாண்டியராஜ் ஆகியோா் பசுவபட்டி கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தரமற்ற கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்த இடங்களை அவா்கள் பாா்வையிட்டனா்.

அப்போது, குடிநீா் குழாய்க்காக வீதிகளில் தோண்டப்பட்ட இடங்களில் தரமான முறையில் கான்கிரீட் தளம் அமைத்து தருவதாக பொதுமக்களிடம் அவா்கள் உறுதி அளித்தனா்.