

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.
புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற செளடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நிகழ்வாக புதன்கிழமை கத்தி போடும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து ஊத்துக்குளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி அழைப்பும் நடைபெற்றது.
சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் வீரவாளுடன் நடனமாடி வேண்டுதலை நிறைவேற்றினா். இந்த ஊா்வலமானது, கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று செளடேஸ்வரி அம்மன் கோயிலை அடைந்தது.
விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில் செழிக்கவும் நோ்த்திக் கடனாக திருவிழா நடத்தப்படுவதாக விழா குழுவினா் தெரிவித்தனா்.