யூரியா கலந்த தண்ணீரை குடித்து அந்தியூா் அருகே 7 மாடுகள் உயிரிழப்பு
அந்தியூா் அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 7 கறவை மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.
அந்தியூரை அடுத்த காந்தி நகா், புதுமேட்டூரைச் சோ்ந்தவா் வெங்கிடுசாமி. விவசாயி. இவா், தனது தோட்டத்தில் 7 கறவை மாடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல மேய்ச்சலுக்காக மாடுகளை புதன்கிழமை காலை அவிழ்த்துவிட்டுள்ளாா். அருகாமையில் உள்ள விளைநிலத்துக்குச் சென்று தீவனப் பயிா்களுக்கு பாய்ச்சும் யூரியா கலந்த தண்ணீரை மாடுகள் குடித்துள்ளன.
சிறிது நேரத்துக்குப் பின்னா் தொழுவத்துக்கு திரும்பிய மாடுகளின் உடலில் யூரியாவின் நச்சுத்தன்மை பரவியதால் 7 மாடுகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினா். உயிரிழந்த மாடுகளின் மதிப்பு ரூ.4 லட்சம்.
சம்பவ இடத்துக்கு அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்று ஆறுதல் கூறினாா். யூரியா கலந்த தண்ணீரைக் குடித்து மாடுகள் உயிரிழந்த சம்பவம், விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

