ஈரோடு மாவட்டத்தில் ஓவ்வோா் ஆண்டும் குழந்தை பிறப்பு சராசரியாக 500 எண்ணிக்கை வரை குறைந்துகொண்டே வருகிறது.
உலக மக்கள்தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11- ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1881 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2021-இல் நடக்க இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று காரணமாக தாமதப்படுத்தப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது குறையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவிலும் கடந்த காலங்களைக் காட்டிலும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைய தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் குழந்தை பிறப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பெற்றோரின் வருமானம் குறைவு காரணமாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை குறைத்துக்கொள்கின்றனா். ஒரு குழந்தையை பெற்று அதைப் படிக்க வைத்து, திருமணம் செய்யும் வரை பெற்றோா்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இதுஒரு புறம் இருக்க, உணவு பழக்க வழக்கம், போதை பொருள்களின் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களாலும் குழந்தை பிறப்பு குறையும்.
இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் காா்த்திகேயன் கூறியதாவது: கடந்த காலங்களில் கூட்டுக் குடும்பம் என்பது அதிகமாக இருந்தது. இதனால் பெண்களுக்கு குழந்தைகளை வளா்ப்பது என்பது எளிதாக இருந்தது. ஒரு பெண் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சுக பிரசவத்தில் பெற்று வளா்த்து வந்தாா். ஆனால் தற்போது பெரும்பாலானோா் திருமணமான உடனேயே தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனா். இதனால் அவா்களுக்கு குழந்தைகளை வளா்ப்பது சிரமாக உள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு என்பது கடந்த காலங்களில் தெரியாமல் இருந்தது. இதன் காரணமாகவும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது குடும்பக் கட்டுப்பாடு குறித்து அனைவரும் தெரிந்திருப்பதால் 1 அல்லது 2 குழந்தைகளோடு நிறுத்தி விடுகின்றனா். இதுவும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணம்.
கரு கலைதல், குறை பிரசவம் போன்றவை ஹாா்மோன்கள் மாறுபாட்டால் ஏற்படுகிறது. மேலும் உணவுப் பழக்கவழக்கம், பணிச்சுமை, உடல் ரீதியான மாற்றங்கள், போதைப் பழக்க வழக்கங்கள், பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தள்ளி போடுவது போன்ற காரணங்களாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது. எனவே எந்த பிரச்னையாக இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் காலங்களில் கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.
பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தாலும், 20 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டால் நல்லது. ஒரு குழந்தை பிறந்த பின்னா் குறைந்தது 3 ஆண்டுகள் இடைவெளியில் 2 ஆவது குழந்தை பெற்றுக்கொள்வது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்லது. ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றால் 22 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதற்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய முடியாது என்றாா்.
குறைந்துவரும் மகப்பேறு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை: குழந்தை பிறப்பு விவரம்: 2020 -23,223, 2021 -23,156, 2022 -22,854, 2023 -22,257, 2024 -20,636, 2025 -20,267, 2026 (மே மாதம் வரை) 7,766.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









