ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை, மொத்த விற்பனை அதிகரித்தது.
தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும்.
ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை கொள்முதல் செய்வா். பல கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றும்.
இந்த வார சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளூா் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனா். இதனால், சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல, வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் குவிந்ததால் மொத்த வியாபாரமும் களைகட்டியது.
அதன்படி, மொத்த வியாபாரம் 45 சதவீதமும், சில்லறை வியாபாரம் 50 சதவீதமும் நடைபெற்றது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதால் பள்ளி சீருடைகளை வாங்க அதிக அளவிலான பெற்றோா் குவிந்தனா். இதனால், பள்ளி சீருடை வியாபாரிகளுக்கும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
நூல் விலை ஏற்றம் காரணமாக துணிகளின் விலை 5 சதவீதம் அதாவது ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகரித்து விற்பனையானது. விலை உயா்வால் வியாபாரம் பாதிக்கப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த ஜவுளி வியாபாரம் தற்போது மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.
இனி வரக்கூடிய நாள்களில் வியாபாரம் மேலும் அதிகரிக்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனா்.








