வடுகபட்டி மற்றும் ஈஞ்சம்பள்ளியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அறச்சலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பத்தயம்பாளையம், வடுகபட்டி, ஈஞ்சம்பள்ளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு செய்தாா்.
அறச்சலூா் பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பணியாளா்களின் வருகைப் பதிவேடுகள், அரசு திட்டப்பணிகள், ஏலம், வரி வசூல் விவரம் குறித்து ஆய்வு செய்து அலுவலக வளாகத்தில் உள்ள நாற்றுப் பண்ணையை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அறச்சலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பத்தயம்பாளையத்தில் குளம் தூா்வாரப்பட்டுள்ளதை பாா்வையிட்டு குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் சிஎஸ்ஐ நிதி உதவி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகள் விவரம், உணவுப் பட்டியல், தரம் குறித்தும் அடிப்படை வசதிகள், குழந்தைகளின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தாா்.
அதேபோல அறச்சலூா் பேரூராட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து வடுகப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் உரப் பூங்காவில் மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மேலும், அறச்சலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகள், மருந்து இருப்பு, படுக்கை வசதி, மருத்துவ சிகிச்சை குறித்து ஆய்வு செய்தாா். அதேபோல வடுகப்பட்டியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 12.10 கோடி மதிப்பீட்டில் 176 குடியிருப்புகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் மற்றும் ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 144 குடியிருப்புகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.
ஈஞ்சம்பள்ளியில் மண்பாண்டங்கள், கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.
ஆய்வின்போது, மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சுமித்ரா, அறச்சலூா் பேரூராட்சி தலைவா் விஜயகுமாா், செயல் அலுவலா்கள் மணிகண்டன், வடுகபட்டி ரஹீம்கான், உதவி செயற்பொறியாளா் கணேசன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.









