காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 28- ஆம் தேதி தண்ணீா் திறக்க நீா்வளத் துறையினா் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் நேரடியாக 15 ஆயிரத்து 743 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இது தவிர நிலத்தடி நீா் ஆதாரத்துக்கும் பிரதானமாக காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது. பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் தொடங்கி கொடுமுடி ஆவுடையாா்பாறை வரை 90 கி.மீ. தொலைவு பயணித்து காவிரியில் கலக்கிறது. வாய்க்கால் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30 -ஆம் தேதி நிறுத்தப்படும். வாய்க்காலில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், வாய்க்கால் பராமரிப்புப் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஜூன் 28- ஆம் தேதி பாசனத்துக்காக நீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முறையான அறிக்கையை அரசு வெளியிடும் என்றனா்.










