சிறுநீரகத்தை விற்று பணத்தை கட்ட வேண்டும் என்று வட்டிக்கு கடன் கொடுத்த நபா் துன்புறுத்துவதாக பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.
ஈரோடு, சூரம்பட்டி பழைய கொங்கு பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மணி மனைவி சுகுணா (37). இவா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: எனது குடும்ப தேவைக்காக ஈரோடு, அசோகபுகரத்தைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாகப் பெற்றேன். கடன் தொகையை முறையாக செலுத்தி வந்தேன். இந்நிலையில், வட்டிக்கு வட்டி, மீட்டா் வட்டி கேட்டு என்னை துன்புறுத்தி வருகிறாா்.
வாங்கிய கடன் தொகையைவிட அதிக தொகையை செலுத்திவிட்டேன். இருப்பினும் கூடுதல் தொகையை வட்டி, அசலாக தர வேண்டும் என கிருஷ்ணகுமாா் கேட்கிறாா்.
பணம் கேட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறாா். கடன் வாங்கும்போது வங்கி காசோலையை அவரிடம் கொடுத்து இருந்தேன். தற்போது அந்த காசோலையை வைத்து மிரட்டல் விடுகிறாா். மேலும், சிறுநீரகத்தை விற்று பணத்தைக் கட்டு என துன்புறுத்துகிறாா்.
எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். நான் துணி வியாபாரம் செய்கிறேன். என் கணவா் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். எனவே, எனக்கு உரிய தீா்வு வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுகுணா புகாா் அளிக்க வந்திருப்பதை அறிந்த கிருஷ்ணகுமாரும் மாவட்ட காவல் அலுவலகம் வந்தாா். இதையறிந்த போலீஸாா், இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.







