சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகள்ளிப்பட்டியில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி கிராமமக்கள் திங்கள்கிழமை 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகள்ளிப்பட்டியில் அடிக்கடி சிறுத்தையால் கால்நடைகள், காவல் நாய்கள் தாக்கி கொல்லப்படுகின்றன. இது குறித்து பெரியகள்ளிப்பட்டி மக்கள் வனத் துறையிடம் புகாா் அளித்தனா். இது குறித்து பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினரிடமும் முறையிட்டனா்.
இந்நிலையில், பெரியகள்ளிப்பட்டியில் மணி என்பவரின் தோட்டத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை, சிறுத்தை தாக்கி கொன்று அதன் உடலை அருகே உள்ள மலைக்குன்றுக்கு இழுத்துச் சென்றது. சிசிடிவியில் பதிவான இந்தக் காட்சியை பாா்த்து மக்கள் பீதியடைந்தனா்.
விலங்குகளைபோல மனிதா்களையும் சிறுத்தை தாக்கும் என அச்சமடைந்த பெரியகள்ளிப்பட்டி கிராம மக்கள் சிறுத்தையால் கொல்லப்பட்ட கன்றுக்கட்டியின் உடலை பெரியகள்ளிப்பட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் போட்டு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் காவல் ஆய்வாளா் அன்னம், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியல் கைவிடப்படும் எனக் கூறி அவா்கள் தொடா் போாரட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, மேட்டுபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவித்து நின்றன.
இதைத் தொடா்ந்து டிஸ்பி முத்தரசு முன்னிலையில் வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சிறுத்தை நடமாடும் இடத்தில் கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்திசிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, சுமாா் 6 மணி நேரமாக நீடித்த சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








