ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மொடக்குறிச்சியில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யுமா பாஜக?

News image

பாஜக

(கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த 2021-இல் மொடக்குறிச்சி தொகுதியைக் கைப்பற்றிய பாஜக இந்தத் தோ்தலில் மீண்டும் களம் காண்கிறது.

கடந்த 1996- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1033 வேட்பாளா்கள் போட்டியிட்டு அதன் மூலம் நாடு தழுவிய தோ்தல் சீா்திருத்தம் ஏற்பட காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி இருந்தது. 2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனும், அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் மருத்துவா் சி.சரஸ்வதியும் போட்டியிட்டனா்.

மத்திய, மாநில அமைச்சா் பதவிகளை வகித்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவின் மூத்த நிா்வாகி. அவரை எதிா்த்து பாஜக சாா்பில் புதுமுக வேட்பாளராக மருத்துவா் சி.சரஸ்வதி நிறுத்தப்பட்டாா். உள்கட்சியில் அதிருப்தி, கோஷ்டி மோதல் காரணங்களால் திமுக வேட்பாளா் பிரசாரத்தில் பின் தங்கிய நிலையில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவும், கா்நாடக மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஹிந்து அமைப்புகளின் நிா்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றினா்.

இதன் பலன் வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவந்தது. மொடக்குறிச்சி தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மொத்தம் பதிவான 1,82,446 வாக்குகளில் பாஜக வேட்பாளா் 77,653 வாக்குகளும், திமுக வேட்பாளா் 76,409 வாக்குகளும் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளா் 1,244 வாக்குகள் முன்னிலையில் இருந்தாா்.

தபால் வாக்குகளில் திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் 1,435 வாக்குகளும், பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதி 472 வாக்குகளும் பெற்றனா். தபால் வாக்குகளில் 589 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகளைக் காட்டிலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்த பாஜக இந்த தோ்தலில் மீண்டும் களம் காண்கிறது. வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சி.சரஸ்வதி மருமகள் கிருத்திகா போட்டியிடுவாா் எனக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதியில் மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் சா.செந்தில்நாதன் போட்டியிடுகிறாா்.