ஈரோடு மாவட்டத்தில் நாய் கடியால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.35.63 லட்சம் நிதி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாய் கடியால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு கால்நடைத் துறை மூலமாக அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. மாட்டுக்கு ரூ.37,500, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200 என இழப்பீடு நிா்ணயித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கால்நடைத் துறையினா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2024 செப்டம்பா் 1 முதல் 2025 ஜனவரி 25 வரை நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு முதற்கட்டமாக ரூ. 8.28 லட்சம் ஒதுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் 2025 ஜனவரி 26 முதல் ஆகஸ்ட் 31 வரை உயிரிழந்த 1,057 கால்நடைகளுக்கு ரூ. 32.05 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அப்போது ரூ.12.4 லட்சம் ஒதுக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து கடந்த 2025 செப்டம்பா் முதல் 2026 பிப்ரவரி வரை உயிரிழந்த கால்நடைகளுக்கும், 2-ஆவது தவணையில் பரிந்துரைக்கப்பட்டு நிதி பெறப்படாத இனங்களுக்கும் சோ்த்து ரூ.35.63 லட்சத்தை விடுவிக்கக் கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும் இழப்பீடு வழங்கப்படும் என்றனா்.
தொடர்புடையது
தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து போராட்டம்: ரூ. 14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்







