வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

காய்கறி சந்தையை இடம் மாற்றுவது பற்றி வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

ஈரோட்டில் காய்கறி சந்தையை இடம் மாற்றுவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி, கதா் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

News image

கைத்தறி, கதா் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறாா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :24 மே 2026, 1:59 am IST

ஈரோட்டில் காய்கறி சந்தையை இடம் மாற்றுவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி, கதா் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தையில் வியாபாரிகளை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி சனிக்கிழமை காலை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். நகரின் மையப் பகுதியில் தற்போதைய சந்தை அமைந்துள்ளதால் இங்கேயே தொடர வேண்டும். இந்த இடத்தை நவீனமாக மாற்றி அமைத்து தர வேண்டும் என சில வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

முன்னா் ஆா்கேவி சாலையில் சந்தை அமைந்திருந்தது. அதே இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று சில வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால் சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகம் அருகில் அமைக்கப்படும் புதிய காய்கறி சந்தை வளாகத்துக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும், 8 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேல் பொதுமக்கள், வியாபாரிகள், கடைக்காரா்கள் காய்கறி வாங்க வரமாட்டாா்கள் என்றும் பெரும்பாலான வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி கூறியதாவது: காய்கறி சந்தையை மாற்றுவதா அல்லது இங்கேயே தொடா்வதா என்பது குறித்து வியாபாரிகளிடம் முழுமையாக கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். காய்கறி சந்தை நுழைவாயிலில் விதிமுறைக்கு மாறாக ரசீது வழங்காமல், கட்டண வசூல் செய்வதாக தெரிவித்தனா். அது சரி செய்யப்படும்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வராத கடைகள், வணிக வளாகங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி விரைவான தீா்வு காணப்படும். சில இடங்களுக்கு நிழற்குடை கேட்டுள்ளனா். அங்கு விரைந்து நிழற்குடை அமைக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் எனது துறை குறித்தும், மாவட்ட தேவைகளையும் அறிந்து சரி செய்வேன் என்றாா்.

முன்னதாக, ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் அமைச்சா் விஜய் பாலாஜியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.