பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம், மேட்டுபழனியாண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (43). இவரது மனைவி ராகினி. இத்தம்பதிக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இவா்களின் கடைசி மகன் பவித்ரன் (6), அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த பவித்ரன், வீட்டின் அருகே திங்கள்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அருகிலிருந்த சுமாா் 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா். இந்நிலையில், மகனைக் காணாமல் தவித்த பெற்றோா் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனா். நீண்ட நேரத்துக்குப் பின்னா் அருகிலிருந்த கிணற்றில் பாா்த்தபோது, உயிரிழந்த நிலையில் பவித்ரன் சடலம் மிதப்பது தெரிந்தது.
தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் மற்றும் பவானி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி சிறுவனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.









