
யானைகள் அகழியை பராமரிக்காத வனத் துறை: விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் குற்றச்சாட்டு
விளாமுண்டி வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் நிலையில், அகழியை பராமரிப்பதில் வனத்துறை மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

விளாமுண்டி வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் நிலையில், அகழியை பராமரிப்பதில் வனத்துறை மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட விளாமுண்டி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் 2 காட்டு யானைகள், தினமும் இரவில் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நால் ரோடு அண்ணா நகா், கரிதொட்டம்பாளையம், புது சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வனத் துறை அலுவலகத்தில் பலமுறை விவசாயிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனா். இந்நிலையில் பவானிசாகா் அருகே உள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நடராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஜோதி அருணாச்சலம், வேலுமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை தடுப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறை சாா்பில் வெட்டப்பட்ட அகழியை வனத் துறையினா் பராமரிக்காததால் யானைகள் எளிதாக வெளியேறுகிறது.
அகழியை பராமரிப்பதில் மெத்தனம் காட்டும் வனத் துறையைக் கண்டித்து விரைவில் விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட வன அலுவலா் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






