பாட்டவயல் சோதனைச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் பசுமை வரி: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் பாட்டவயல் சோதனைச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் பசுமை வரி வசூலிக்கப்படுவதற்கு பொதுமக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் பாட்டவயல் சோதனைச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் பசுமை வரி வசூலிக்கப்படுவதற்கு பொதுமக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் இயற்கையை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரிக்குள் வரும் வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் ரூ.20 வசூலிக்கப்பட்டு வருகிறது.  
இந்த வரி தமிழக -கேரள எல்லையான பாட்டவயல்,  தமிழக-கர்நாடக எல்லையான கக்கநள்ளா மற்றும் நீலகிரி-கோவை மாவட்ட எல்லையான குஞ்சப்பனை மற்றும்  பர்லியாறிலும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள்  மாவட்டத்தின் பதிவு எண்ணான டிஎன் 43 என்ற  பதிவோடு  கூடிய வாகனங்களுடன்,  வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களையும் வைத்துள்ளனர்.  
இதற்காக அவர்களுக்கு மாவட்ட காவல் துறையின் சார்பில் உள்ளூர் வாகனம் என்ற பெயரிலான ஸ்டிக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பசுமை வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கும் இந்த உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் பசுமை வரி வசூலிப்போர், டிஎன்43  என்ற பதிவு எண்ணுள்ள வாகனங்களுக்கு மட்டுமே விலக்களிக்க  வேண்டும் என  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும்,  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனமாக இருந்தாலும், வேறு பதிவு எண்ணைக் கொண்ட வாகனங்கள் கட்டாயமாக பசுமை வரி செலுத்தப்பட வேண்டும் என பாட்டவயல் சோதனைச் சாவடியில் வரி வசூலிப்போர் வலியுறுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இச் சாலையில் வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு கட்டாயமாக பசுமை வரி செலுத்த வேண்டும் என சோதனைச் சாவடி ஊழியர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   அதே நேரத்தில் அங்கு  கட்சிக் கொடிகளுடன் வந்த பிற மாவட்ட பதிவு எண்ணைக் கொண்ட  வாகனங்களை சோதனைச் சாவடி ஊழியர்கள்  பசுமை வரி வாங்காமல் அனுமதித்தனராம். 
இது பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதுதொடர்பாக சோதனைச் சாவடியிலிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, மேல் விவரங்களை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டுக் கொள்ளுமாறு கூறினர்.  
எனவே, இப் பிரச்னை தொடர்பாக கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு  அனுப்பியுள்ளனர்.  இந்த விவகாரத்தில் ஆட்சியர்  உரிய விசாரணை நடத்துவதோடு,  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வெளி மாவட்ட பதிவு எவண் கொண்ட வாகனங்களுக்கும் பசுமை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com