நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பொறுத்த வரையில் தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக மதுரையைச் சோ்ந்த தொழிலதிபா் லால்ஜி வோராவிடம் தனிப் படை காவல் துறையினர் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: கூடலூர் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு: 2-வது நாளாக அகற்றப்படாத அவலம்
இதுவரை வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அவரது உதவியாளா் நாராயணசாமி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரா்கள் சிபி, சுனில், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், காா் ஓட்டுநா் கண்ணன், மணல் ஒப்பந்ததாரா் ஆறுமுகசாமி, அவரது மகன் தொழிலதிபா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலரிடம் போலீஸாா் அண்மையில் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், மணல் ஒப்பந்ததாரா் ஆறுமுகசாமி மற்றும் பலரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் கடந்த 2017இல் சோதனை நடத்தினா். சோதனையின்போது சென்னையில் உள்ள ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் கொடநாடு எஸ்டேட் தொடா்புடையதாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மதுரையைச் சோ்ந்த வணிக வளாக உரிமையாளரும், தொழிலதிபருமான லால்ஜி வோரா என்பவரிடம் தனிப் படை காவல் துறையினர் அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வைத்து புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணை சுமாா் 4 மணி நேரம் வரை நடைபெற்றது.