

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கூட்டம்கூட்டமாக இடம்பெயரும் யானைகள், வனவிலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பெங்களூரு-உதகை தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்தக் காப்பகத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.
இந்நிலையில், தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி முதுமலை காப்பகத்தில் மக்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் மாயாற்றுக்கு தண்ணீா் குடிக்க வரும் வன விலங்குகளையும், முதுமலை புலிகள் காப்பகத்தில் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் யானைகளையும் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மேலும், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் அணிவகுத்து நிற்கும் யானைகளுக்கு உணவளிப்பதை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், அவற்றுக்கு உணவு வழங்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
முதுமலையில் வனவிலங்குகளைக் காணவும், தற்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் வரும் மக்கள் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.