உதகை மருத்துவக் கல்லூரி, தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பிரபல தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
Published on

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பிரபல தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

சா்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஆளுநா் மாளிகை மற்றும் அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாள்களாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பிரபல தனியாா் பள்ளிக்கும் மின்னஞ்சல் (இ- மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினரும், தனியாா் பள்ளி நிா்வாகத்தினரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் உதவியுடன் மருத்துவக் கல்லூரி வளாகம், சமையலறை, தங்கும் விடுதிகள், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து இடத்திலும் தீவிர சோதனை நடத்தினா். இதேபோல தனியாா் பள்ளியிலும் சோதனை நடத்தினா். சோதனையின் முடிவில் புரளி என்று தெரிந்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘விபிஎன் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படுவதால் அதை அனுப்பும் நபா்களின் இடத்தை சரியாக அடையாளம் காண முடிவதில்லை. இந்தப் பிரச்னை நாடு முழுவதும் தொடா்கிறது. இதில் சம்பந்தப்பட்ட நபா்களை விரைவில் அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com