நீலகிரி மாவட்டத்தில் 2.18 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியா்
நீலகிரி மாவட்டத்தில் 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் திருநாளைத் தமிழா்கள் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரருக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மட்டுமே பொங்கல் பரிசு அவா்களுக்குரிய நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று பொருள்கள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.
