/
குன்னூா் ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலவி வருவதால் குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால், யானைகள் தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் வெளியேறி, ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதனால், தோட்ட குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளா்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.










