திருப்பூரில் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்து விட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் தலைமறைவான நபரின் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். நாகராஜ் அவருடைய வீட்டிலேயே சிறிய அளவில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பலகார சீட்டு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார்.
அவரிடம், வெங்கமேடு, செட்டிபாளையம், இந்திரா நகர், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர். இதில் பலர் தீபாவளி பலகார சீட்டில் வாரம் ரூ.100 வீதம் 52 வாரம் பணம் கட்டி உள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன் சீட்டுக்குப் பணம் கட்டியவர்கள் நாகராஜிடம் சென்று பணத்தைக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தருவதாகக் கூறி இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் சீட்டு பணத்தைக் கேட்பதற்காக நாகராஜ் வீட்டுக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது, அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்டோர் நாகராஜ் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பர்பாளையம் போலீஸார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இதில், நாகராஜ் தங்களிடம் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்று, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.