/

ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதல்: இருவர் சாவு

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

Updated On :21 மே 2018, 7:16 pm

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கோவையில் இருந்து இயந்திரம் மற்றும் இரும்பு பொருள்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோ பெருந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவிநாசி - ஈரோடு புறவழிச்சாலையில் நாதம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, ஆட்டோவில் இருந்த இரும்பு பொருள்கள் நழுவி உள்ளன. இதையடுத்து ஓட்டுநர் சரக்கு ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு மற்றொரு சரக்கு ஆட்டோவில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன் (42) என்பவர் உதவியுடன் பொருள்களை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த இருசக்கர வாகனம், நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த, நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலம் ஈக்காட்டூரைச் சேர்ந்த சக்திவேல் மகன் நிஷாந்த் (22) , நீலகிரி மாவட்டம், உதகை பைக்காரா மின்வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் கிருபாகரன்(20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இரும்பு பொருள்களை சரி செய்ய உதவி செய்து கொண்டிருந்த கணேசன் படுகாயம் அடைந்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.