காங்கயம்: காங்கயம் அருகே, உயர்மின் கோபுரம் அமைந்துள்ள நிலத்திற்கு மாத வாடகை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயம் அருகே விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராமபட்டிணம் பகுதியில் மின்கோபுரம் அமைந்துள்ள உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உயர்மின் கோபுரம் அமைந்துள்ள நிலத்திற்கு மாத வாடகை கொடுக்க வேண்டும், அரசாணை எண்:54 -ன் படி எண்ணெய், எரி காற்றுக் குழாய் திட்டங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்தது போல, மின் திட்டங்களால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கும் அதே இழப்பீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர்.
இதில், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் சிவன்மலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.