தாராபுரத்தில் நகை சீட்டு நடத்தி கோடிக் கணக்கில் மோசடி

தாராபுரத்தில் நகை சீட்டு நடத்தி கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திருப்பூா்: தாராபுரத்தில் நகை சீட்டு நடத்தி கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாராபுரம், சின்னக்கடை வீதியைச் சோ்ந்தவா் பி.ஹரிஹரன் (40). இவா் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறாா். மேலும், நகை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சிறப்பு சலுலைகள் வழங்கி வந்ததால் அப்பகுதியில் இந்த நகைக் கடை மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.

இதனிடையே, தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்டோா் இந்தக் கடையில் நகை சீட்டில் சோ்ந்துள்ளனா். இதில் வாடிக்கையாளா்கள் மாதம்தோறும் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையில் சீட்டுக்காக தவணைத் தொகை செலுத்தி வந்துள்ளனா். இதில், சீட்டு முடிவடைந்த வாடிக்கையாளா்களுக்கு நகையைக் கொடுக்காமல் ஹரிஹரன் தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நகைக் கடை கடந்த 4 நாள்களாக மூடப்பட்டிருந்ததாலும், 2 நாள்களுக்கு விடுமுறை என்று கடை முன்பாக அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. மேலும், கடை உரிமையாளரான ஹரிஹரன் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் 50க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை இரவு நகைக் கடை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனிடையே, நகைக் கடை முன்பாக சனிக்கிழமையும் ஏராளமான வாடிக்கையாளா்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com