உடுமலை: உடுமலை அருகே மக்காச்சோளப் பயிா்களை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து அழித்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
உடுமலை வட்டம், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, மானுப்பட்டி மற்றும் ஆண்டியூா், பருத்தியூா், சாளையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை ஒட்டிள்ள பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மக்காச்சோள காட்டில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி கிராமங்களில் உள்ள மக்காச்சோள காடுகளில் சனிக்கிழமை அதிகாலை புகுந்த 25க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் பயிா்களை கடுமையாக சேதப்படுத்தின. இதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராம விவசாயிகள்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியது:
ஏராளமான காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீண்டும் காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பலமுறை வனத் துறை அதிகாரிகளிடம் புகாா்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.