பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள 27ஆம் தேதி பாலாயம் நடத்த முடிவு. செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பல்லடம் அறநெறி அறக்கட்டளை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறக்கட்டளை தலைவரும், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினருமான கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் வைஸ் பி.கே.பழனிசாமி, துணைத்தலைவர்கள் மா.பழனிசாமி, ராம்.கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆ.அண்ணாதுரை வரவேற்றார்.
இக்கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் பி.ஜே.விஜயகுமார், கோமதி வெள்ளிங்கிரி உள்பட அறக்கட்டளை அறங்காவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்லடம் கடை வீதியில் பல நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளவும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேத விற்பன்னர்களை கொண்டு பாலாயம் நடத்தவும் அதனை தொடர்ந்து கடை வீதி பாலதண்டாயுதபாணி கோயில், பட்டேல் வீதி அருளானந்த ஈஸ்வரர் கோயில் ஆகியவற்றில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கோயில் திருப்பணிக்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் ரூ.1லட்சமும், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.எம்.ராமமூர்த்தி, பானு எம்.பழனிசாமி, பல்லடம் தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், சமூக ஆர்வலர்கள் கதிரவன் ராமசாமி,கோமதி வெள்ளிங்கிரி ஆகியோர் தலா ரூ.50ஆயிரம் நன்கொடையாக வழங்கினர்.