திருப்பூர் மாநகரில் காவல்துறையினரின் ரோந்துகளை கண்காணிக்கும் வகையில் மாநிலத்திலேயே முதன்முறையாக மின்னனு ரோந்து செயலி புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர பகுதிக்குள் குற்றங்களை தடுக்கவும், காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவும் ரோந்து பயணங்களை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் புதிதாக மின்னணு ரோந்து செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீட் எனப்படும் மின்னனு ரோந்து செயலியை திருபபூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா புதன்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருப்பூர் வடக்கு, தெற்கு காவல் சரகத்திற்கு உள்பட்டு 23 ரோந்து பகுதிகள் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும், இரண்டு காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில் சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் காவல் அதிகாரிகள் தங்களது பகுதியில் உள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்கள் , குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பட்டா புத்தகங்களில் கையொப்பமிட்டு ரோந்து பணிபுரிந்து வரக்கூடிய சூழ்நிலையில் அவற்றை நவீனப்படுத்தும் வகையில் மின்னனு ரோந்து செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நகரின் முக்கிய இடங்களில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கியூ.ஆர். கோடினை ரோந்து காவல் அதிகாரிகள் தங்களது கைப்பேசியில் உள்ள செயலியின் மூலம் ஸ்கேன் செய்து பணியாற்றும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளாதாகவும், அந்தந்த பகுதிக்கு உள்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள ரோந்து காவல் அதிகாரிக்கு தெரிவிப்பதுடன் அடுத்தடுத்த பகுதிகளில் உள்ள காவல் அதிகாரிகளை எச்சரிக்கையாகவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் முடியும் எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபடக் கூடிய காவலர்களின் பணியை மாநகர காவல் ஆணையர் வே.வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.