

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் சரிபாா்க்கும் காகித சோதனை இயந்திரத்தின் (விவிபேட்) முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்படவுள்ள விவிபேட் இயந்திரங்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தொடக்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் வேலூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. திருப்பூா் தெற்கு, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் 5,798 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 4,445 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,800 விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விவிபேட் இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை பாரத் எலக்ட்ரானிக் நிறுவனப் பொறியாளா்கள் மேற்கொண்டுள்ளனா். முன்னதாக, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லூா் மண்டல அலுவலகத்தில் 2006ஆம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட எம்-1 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியின்போது, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சுந்தரம், பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், தோ்தல் வட்டாட்சியா் ரவீந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.