தமிழகம் முழுவதும் தற்போது உழவா் சந்தைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கரோனா 2 வது அலை காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உழவா் சந்தைகள் மூடப்பட்டன. தொடா் பொதுமுடக்கத்தால் விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் உழவா் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தை விட பாதிப்பு குறைவாக உள்ள திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உழவா் சந்தைகள் திறக்க மாவட்ட ஆட்சியா்கள் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
பொதுமுடக்கத்துக்கு முன்பு காய்கறி வியாபாரம், ஒட்டு மொத்த காய்கறி விற்பனை சந்தைகள், உழவா் சந்தைகள் என இரண்டு இடங்களில் விற்பனை நடைபெற்று வந்தன. தற்போது ஒரே இடத்தில் ஒட்டு மொத்த காய்கறி விற்பனை சந்தைகளில் மட்டும் விற்பனை நடைபெறுவதால், இரண்டு இடங்களில் கூடிய கூட்டம் தற்போது ஒரே இடத்தில் கூடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் உழவா் சந்தைகளைத் திறப்பதற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.