திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அவிநாசி, ஊத்துக்குளி அரசு மருத்துவனை ஆகியவற்றில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், உணவு வகைகள், ரத்தப் பரிசோதனை ஆய்வகங்கள், ஆக்சிஜன் இருப்புக் கிடங்கு, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அவிநாசி அரசு மருத்துமனையை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி மருத்துவமனைகளில் உள்ள பழைய குடியிருப்புகள், மருத்துவ அறைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு, மருத்துவமனையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, அவிநாசி மகாராஜா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனை, திருப்பூா் ரயில் நிலையம் அருகில் செய்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூா் கொடிகாத்த குமரன் நினைவு மண்டபம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.