திருப்பூர் அருகே உள்ள தமிழ்நாடு திரையரங்கள் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(38), இவர் பல்லடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கான தனது அல்டோ காரில் திருப்பூர் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்து கொண்டிருந்தார். இவரது கார் தமிழ்நாடு திரையரங்கம் அருகில் வந்தபோது காரில் இருந்து வெடிவெடித்தது போன்ற சப்தம் கேட்டுள்ளது.
இதையும் படிக்க- ஐபிஎல்: சன்ரைசர்ஸ் உதவிப் பயிற்சியாளர் ராஜிநாமா
இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் காரை நிறுத்தி இறங்கிவிட்டார். இதனிடையே, சில நிமிடங்கள் அந்தக் கார் தீ பற்றி எரியத்தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு காரில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், காரில் பொருத்தப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துள்ளதே இந்த தீ விபத்துக்கு காரணம் என்றனர். இதுதொடர்பாக வீரபாண்டி காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பல்லடம்-திருப்பூர் சாலையில் சில நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.