திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள டி.கே.டி மில் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், வாய்க்கால் மேடு, கெம்பே நகர், ஏ.பி நகர், செல்வி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் என அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் மாநகராட்சி புறக்கணித்து வருவதாகவும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தங்களை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி அடிப்படை வசதிகள் செய்து தராமல் ஏமாற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் - பல்லடம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க துவங்கியது. காலை நேரத்தில் வேலைக்கு சென்றவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் காரணமாக திருப்பூர் - பல்லடம் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.