திருப்பூர்: திருப்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் அதிமுக நிர்வாகிகள் புதன்கிழமை மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடியிடம், அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயரமான் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அதிமுக ஆட்சி காலத்தில் பேருந்து நிலையம் புதுப்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்திலேயே திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்டுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருப்பூரின் பெருமையை உலகெங்கிலும் பறைசாற்றும் வகையில் உயிர்பிரியும் வரையில் தேசியக் கொடியை ஏந்திப் போராடிய தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆகவே, திருப்பூர் குமரன் பெயரை பழைய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அளிப்பின்போது, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ஆர்.அன்பகம் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.