அவிநாசி: அவிநாசி அருகே சாவக்கட்டு பாளையத்தில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போரட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 வழங்க வேண்டும், கள் விற்க அனுமதிக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பாமாயில் இறக்குமதி தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சிதறு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அவிநாசி வடக்கு ஒன்றிய பகுதி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் ஒன்றிய தலைவர் பிகேஎஸ். வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் கண்டன உரையாற்றினார். வடக்கு ஒன்றிய பகுதி பொறுப்பாளர் ரத்தினசாமி நன்றி தெரிவித்தார்.
இறுதியாக போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் விவசாயிகளின் விலை பொருள்கள் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக தெரித்தனர்.